இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். காரைக்காலை பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு, இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் கைது
கடல் எல்லையை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி நாள் தோறும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படும் போது மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்கிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட படகுகள் எந்த வித பராமரிப்பும் இல்லாமல் இலங்கை துரைமுக பகுதியில் உள்ள கடலில் மூழ்கி வருகிறது. மேலும் தமிழக மீனவர்களும் தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை அட்டூழியம்
இதனிடையே கடந்த 3 தினங்களுக்கு முன்பு ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 439 விசைப்படகுகள் அனுமதி சீட்டு பெற்று சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி 33 மீனவர்களை இல்ங்கை கடற்படை கைது செய்தது. இதனையடுத்து தமிழக முதலமைச்சரும் மத்திய அரசுக்கு உடனடியாக கடிதம் எழுதியிருந்தார். மீனவர்களை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில் மீண்டும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு
இது மட்டும்மல்லால் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இதில் 2 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து வந்த இலங்கை கடற்படைக்கு இந்திய அரசு எச்சரித்திருந்த நிலையில் கடந்த சில வருடங்களாக துப்பாக்கி சூடு நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
