ஆன்மீக அரசியல் என்பது ஏமாற்றுவேலை; அது விரைவில் அடையாளம் காட்டப்படும் - கீ.வீரமணி பளார்...
திருச்சி
ஆன்மிக அரசியல் என்பது ஏமாற்று வேலை. அது விரைவில் அடையாளம் காட்டப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டு தொடக்க விழாவுக்கு தலைமையேற்க நேற்று வருகை தந்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
அப்போது அவர் செய்தியாளர்களிடம், "மதங்களும், கடவுள் நம்பிக்கையும் மக்களை பிரித்து வைத்துள்ளன. கடவுள் பெயரால் மதச் சண்டை, சாதிச் சண்டை, வீண் சச்சரவு, பிரித்தாளுதல், பிரிவினையை வளர்த்தல் உள்ளிட்ட பணிகளையே மேற்கொண்டு வருகின்றனர்.
நாத்திகம் மட்டும் மக்களை இணைக்கும் பணியையும், மனிதகுலத்தை வளர்த்தெடுக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. நாத்திகம் என்பது வெறும் கடவுள் மறுப்புடன் நின்றுவிடுவதல்ல. மனிதத்தை வளர்க்கும் பணிகளை மேற்கொள்வதாகும். எதனையும் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து அணுகுவதே நாத்திகமாகும்.
உலகெங்கும் பெரியாரின் கொள்கைகள் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதற்கு உலக நாத்திகர் மாநாடு சான்றாக அமையும்.
ஆன்மா என்பதே ஆத்மாவிலிருந்து தோன்றிய வார்த்தையாகும். ஆத்மாவிலேயே பல வகைகள் இருப்பதாக வேதநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கூடு விட்டு கூடு பாயும் தன்மை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். அதிலிருந்து தோன்றியதாகக் கூறப்படும் ஆன்மிகம் என்பது அரசியலில் சேர இயலாது.
ஆன்மிகத்தையும், அரசியலையும் கலக்கக்கூடாது. ஆன்மிக அரசியல் என்பது ஏமாற்று வேலை. ஆன்மிக அரசியல் எனக் கூறுவது புரட்டு நடவடிக்கையே. போலித்தனமாது. அப்படிக் கூறுவது ஏமாற்றுவேலை என்பது விரைவில் அடையாளம் காட்டப்படும்" என்று அவர் தெரிவித்தார்.