உணவுப் பொருள் உற்பத்திக்கான உரிமம் பெற தருமபுரியில் இன்று சிறப்பு முகாம்கள் - மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை...
தருமபுரி
உணவுப் பொருள் உற்பத்திக்கான உரிமத்தை பெற தருமபுரியில் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என்றும், அதனை உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அலுவலகம் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், "தருமபுரி மாவட்டத்தில் தள்ளுவண்டி முதல் பெரிய அளவிலான நிறுவனம், அரசு மற்றும் தனியார் உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கட்டாயம் உணவு உற்பத்திக்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கென தருமபுரி மாவட்டத்தில், பகுதி வாரியாக சிறப்பு முகாம்கள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக டிசம்பர் 23 (அதாவது இன்று) பாலக்கோடு வட்டத்தில் காலை 8 மணிக்கு புலிகரை, காலை 9 மணிக்கு தளவாய் அள்ளி, காலை 11 மணிக்கு பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம், நண்பகல் 1.30 மணிக்கு ஜெர்த்தலாவ் ஊராட்சி மன்ற அலுவலகம், மதியம் 2.30 திருமல்வாடி மற்றும் மாலை 4 மணிக்கு மாரண்டஹள்ளி பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
எனவே, அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள் புகைப்படம் மற்றும் அடையாள அட்டையுடன் கலந்துகொண்டு உணவு உற்பத்திக்கான உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், உரிமம் புதுப்பிப்பவர்களும் இந்த முகாமில் பங்கேற்று தங்களது உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.