ராஜராஜ சோழன் - உலோகமா தேவி சிலைகளை வரவேற்க சிறப்பு ஏற்பாடு...
தஞ்சை பெரிய கோயிலில் இருந்து திருடப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் உலோகமா தேவியின் சிலைகள் இன்று தமிழகம் கொண்டுவரப்பட உள்ளது. ராஜராஜசோழன், உலோகமாதேவி சிலைகளை தேவாரம் பாடி வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தஞ்சை பெரிய கோயிலில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரண்டு சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள காலிகோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையை தமிழக சிலை திருட்டு தடுப்பு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு மீட்டுள்ளது.
தற்போது இந்த சிலையின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 150 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் உலோகமாதேவியின் சிலைகள் இரண்டும் ஐம்பொன்னால் செய்யப்பட்டவை.
தஞ்சை பெரிய கோயிலுக்கு ராஜராஜ சோழன் 66 சிலைகளை நன்கொடையாக கொடுக்கப்பட்டது, கல்வெட்டு தகவல்களில் மூலம் தெரியவந்துள்ளது. அதில் இரண்டு சிலைகள் திருட்டுப்போயுள்ளன. சிலை திருட்டு தொடர்பான தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிந்து, பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது.
மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் உலோகமா தேவியின் சிலைகளை தேவாரம் பாடி வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இரண்டு சிலைகளும், ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த சிலைகள் இன்று மாலை 3.30 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலைகளை மீட்கக்கோரி கடந்த 50 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த முனைவர் இறையரசன் உள்ளிட்ட தமிழறிஞர்கள், சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று இச்சிலைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஐ.ஏஎஸ். அதிகாரியும் கல்வெட்டு ஆய்வாளருமான முனைவர் மு.இராசேட்நதிரன், தமிழ் வளரச்சி துறை இயக்குநர் முனைவர் விஜயராகவன், பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை சிவபாத சேகரன், முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பல அறிஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். அப்போது, ஓதுவார்கள் தேவாரம் பாடி, சிலை வடிவில் உள்ள பேரரசன் ராஜராஜ சோழனையும், உலோகமாதேவியையும் வரவேற்க உள்ளனர்.