உஷார் மக்களே! வங்கி அதிகாரிபோல செல்போனில் பேசி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.95 ஆயிரம் திருட்டு..
வேலூர்
வேலூரில், வங்கி அதிகாரி போல செல்போனில் பேசி முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.95 ஆயிரம் திருடப்பட்டது.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த பெருமாபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகரன் (67). இவருடைய செல்போனுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து அதிகாரி பேசுவதாக ஒருவர் அழைத்துள்ளார்.
அவர், "சேகரன் ஏ.டி.எம். கார்டு ‘லாக்’ ஆகிவிட்டது" என்றும் "புதிய ஏ.டி.எம். கார்டு பெறுவதற்கு ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் அதன் ரகசிய எண் வேண்டும்" என்று கேட்டுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய சேகரன் அவற்றை கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அவருடைய செல்போனுக்கு அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.95 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல்கள் வந்தன.
அதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். வங்கியில் இருந்து யாரும் ஏ.டி.எம். கார்டு எண் கேட்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செல்போனில் பேசிய மர்மநபர் வங்கி அதிகாரி பேசுவது போன்று பேசி ரூ.95 ஆயிரத்தை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து நேற்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சேகரன் புகார் மனு அளித்தார். அதன்பேரில் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.