க்யூ.ஆர். கோடு தொழில்நுட்பம் மூலம் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
இரயில் நிலையங்களில் கவுண்டர்களில் கூட்ட நெரிசலில், நீண்ட வரிசையில் நின்று டிக்கேட் பெறுவதை தவிர்க்கும் பொருட்டு தெற்கு ரெயில்வே புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது.அதன் படி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த முறையால் பயணிகள், நீண்ட வரிசையில் நின்று டிக்கேட் பெறுவது பெரிதும் குறைந்தது. இருந்தபோதிலும், சில நேரங்களில் கவுண்டர்களில் பொதுமக்கள் கூட்டத்தை தவிர்க்க முடியவில்லை என்று சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் தெற்கு ரயில்வே புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் க்யூ.ஆர். கோடு தொழில்நுட்ப வசதியுடன், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே கொண்டுவந்துள்ளது.
இதுக்குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில்வே பயணிகள் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் வசதியை விரிவுப்படுத்தி வருகிறோம்.அதன்படி, க்யூ.ஆர். கோடு மூலம் ஏடிவிஎம் (தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள்) டிக்கெட், நடைமேடை கட்டணம் உள்ளிட்டவற்றைப் பெறலாம். சீசன் டிக்கெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளையும் புதுப்பித்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே ஸ்டார்ட் கார்டு, பிஎச்எம் யுபிஐ க்யூ.ஆர். கோடு, பேடிஎம், பிஎச்எம் யுபிஐ கோடு வழியாகவும் கட்டணம் செலுத்தலாம். இதற்கான முழு விளக்கத்தையும் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களின் திரையில் காணும்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தகவல்களைபெற 139 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். க்யூ.ஆர். முறையில் டிக்கெட் பெறுவோருக்கு 0.5 சதவீதம் கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானியங்கில் இயந்திரங்களில் க்யூ ஆர் கோடு மூலம் மின்னணு முறையில் கட்டணம் செலுத்துவதன் மூலம் பெரும் அளவில் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நடைமுறையை மற்ற இரயில் நிலையங்களுக்கும் உடனடியாக விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
