பெற்ற தாயைக் கொலை செய்த மகன்! துண்டிக்கப்பட்ட தலையுடன் மகன் போலீஸ் நிலையத்தில் சரண்!
பெற்ற தாயை, மகன் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. துண்டிக்கப்பட்ட தாயின் தலையுடன் மகன் போலீசில் சரணடைந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, மறவன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருக்கு 5 மகன்கள் உள்ளனர். இவர், 2007 ஆம் ஆண்டு கணவன் தங்கராசு தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணையில் போதிய சாட்சிகள் இல்லாததால் ராணி விடுதலையானார்.
இதன் பின்னர், வெளியே வந்த ராணி, தனது கடைசி மகன் (10) உடன் தனியே வசித்து வந்தார். அதே பகுதியில் அவரது மூத்த மகன் ஆனந்த் வசித்து வந்தார். ராணிக்கும் அவரது மூத்த மகனுக்கும் இடையே சொத்து சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் உள்ள தேவாலயம் செல்ல ராணி, கடைசி மகனுடன் பேருந்து நிறுத்தம் ஒன்றில் காத்திருந்தார். அப்போது, அங்கு மூத்த மகன் ஆனந்த் அரிவாளுடன் வந்துள்ளார்.
ராணி அருகே வந்த ஆனந்த், கையில் இருந்த அரிவாளால், கண்ணிமைக்கும் நேரத்தில் ராணியின் தலையைத் துண்டித்தார். இதனைப் பார்த்த ராணியின் கடைசி மகன் அலறி அடித்து கதறி அழுதான். இந்த சம்பவத்தைப் பார்த்த அருகில் இருந்தோர், அதிர்ச்சி அடைந்தனர். துண்டித்த தலையுடன் கறம்பக்குடி காவல் நிலையம் சென்று ஆனந்த் சரணடைந்தார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனந்த் தனது தாய் ராணியை எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக தாயைக் கொன்றாரா? அல்லது தந்தையைக் கொன்றதற்காக ஆனந்த் பழி வாங்கினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.