33 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட நிலத்திற்கு பட்டா கேட்டு சுதந்திர போராட்ட தியாகியின் மகன் தர்ணா...
தருமபுரி
தருமபுரியில் 33 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட நிலத்திற்கு பட்டா வழங்க கோரி சுதந்திர போராட்ட தியாகியின் மகன் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி கோவிந்தசாமி செட்டியார் என்பவருடைய மகன் காந்தி (70).
இவர் நேற்று தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு ஒன்றை கொடுக்க வந்தார். பின்னர் அவர் திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு வந்து கோரிக்கையை கேட்டறிந்தனர். அப்போது அவர் கூறுகையில், "கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர போராட்ட தியாகியான எனது தந்தைக்கு வழங்கப்பட்ட மூன்று ஏக்கர் நிலத்திற்கு இதுவரை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. எனவே, பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
எழுபது வயது முதியவரின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.