சிவகங்கை: தேவகோட்டையில் தாய், தந்தையை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய மகனை போலீசார் கைது செய்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, ராம்நகரை சோ்ந்தவா் மகாலிங்கம். இவா் ஓய்வு பெற்ற வட்டாச்சியா். இவரது மனைவி சுசிலாவும் ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு சந்தானம் என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். மூவருக்கும் திருமணமான நிலையில், அனைவரும் தேவகோட்டையிலேயே தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர். மகன் சந்தானம் ராம்நகர் பகுதியிலேயே கோழிக் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தொழிலில் நடத்த தனது தாய், தந்தையிடம் பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இன்று தனது தந்தை வீட்டிற்கு வந்த சந்தானம் பணம் கேட்டபோது, பெற்றோர் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தானம் அருகில் இருந்த அரிவாளை எடுத்து, தாய், தந்தையை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

வீட்டின் வேலையாள், கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினா், கொலை செய்யப்பட்டு கிடந்த தம்பதியினரை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய சந்தானத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.