நீலகிரியில் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளில் மண் சரிவு; திடீர் பள்ளங்களால் மக்கள் அச்சம்...
நீலகிரி
நீலகிரியில் பெய்துவரும் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சாலையில் ஏற்படும் திடீர் பள்ளங்களால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. உதகை, குன்னூர், மஞ்சூர், பந்தலூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
உதகை, உசில்மேடு பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததை அறிந்த உதகை தீயணைப்பு வீரர்கள் அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
உதகை காபிஹவுஸ் பின்பகுதியில் குடியிருப்புகள் அருகே திடீரென நேற்று முன்தினம் நள்ளிரவு பள்ளம் ஏற்பட்டது. இதனை காலையில் எழுந்து பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மழை பெய்ய, பெய்ய பள்ளம் பெரிதாகிக்கொண்டே போனது. அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய்க்காக குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் அதன் காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டு இருக்கலாமா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இரயில்வே குடியிருப்புக்கு செல்லும் சாலையில் ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்டு இருந்தது. தற்போது தொடர் மழை காரணமாக அதிகளவில் மண் சரிந்துள்ளது. அப்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால், அடிக்கடி மண் சரிந்து வருகிறது. அங்குள்ள சாலையே பெயர்ந்து விட்டது.
மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள பழமையான இரயில்வே குடியிருப்பு ஒன்றின் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு:
குன்னூர் - 3.6 மில்லி மீட்டர், கூடலூர் - 51 மில்லி மீட்டர், குந்தா - 14 மில்லி மீட்டர், கேத்தி - 8 மில்லி மீட்டர், கோத்தகிரி - 4.4 மில்லி மீட்டர், நடுவட்டம் - 26.5 மில்லி மீட்டர், ஊட்டி - 22.2 மில்லி மீட்டர், கல்லட்டி - 12 மில்லி மீட்டர், கிளன்மார்கன் - 15 மில்லி மீட்டர், அப்பர்பவானி - 51 மில்லி மீட்டர்,
எமரால்டு - 17 மில்லி மீட்டர், அவலாஞ்சி - 50 மில்லி மீட்டர், கெத்தை - 12 மில்லி மீட்டர், கிண்ணக்கொரை - 2 மில்லி மீட்டர், கோடநாடு - 22 மில்லி மீட்டர், தேவாலா -5 4 மில்லி மீட்டர், பர்லியார் - 2 மில்லி மீட்டர் என மொத்தம் 366.7 மில்லி மீட்டர்மழை பெய்து உள்ளது.