Russia Ukraine War: தண்ணீர், உணவு கிடைக்கல..5 நாட்கள் பாதாளத்தில் இருந்தோம்.. மீண்ட தமிழ் மாணவர்கள் பகீர்..
Russia Ukraine War: உக்ரைன் மீது ரஷ்யா போர்தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உக்ரைனில் இருந்து இதுவரை 771 மாணவர்கள் தமிழகம் வந்துள்ளனர் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
உக்ரைனின் முக்கிய நகரங்களை தொடர்ச்சியாக ரஷ்ய படை கைப்பற்றி வருகிறது. மேலும் கீவ்,கார்கீவ் உள்ளிட்ட நகரங்களில் தொடந்து குண்டு மழைகளை ரஷ்ய இராணுவம் பொழிந்து வருகிறது. மேலும் இராணுவ தளம், விமான படை தளம், பெரிய பெரிய கட்டிடங்கள் உள்ளிடவை அழிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் பல உயிர்களும் பறிப்போயின. இந்த போதிலும் போர் தொடர்ந்து வருகிறது.போர் நிறுத்தம் காரணமாக பெலாரஸ் நாட்டில் உக்ரைன் - ரஷ்யா இரு நாடுகளும் இடையே, நடத்த முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தொடர்ந்து உக்ரைன் அரசுக்கு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்யா அழைப்பு விடுத்தது. இதை அடுத்து நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது.
அதன்படி வோல்னோவாகா, மரியுபோல் நகரங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் தற்காலிக போர் நிறுத்ததை ரஷ்யா அறிவித்தது.ஆனால் அது தோல்வியடைந்ததாக கூறி, தற்போது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இதனிடையே போர் தாக்குதலால் உக்ரைன் வான்பரப்பில் பயணியர் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அபரேஷன் கங்கா திட்டம் மூலம், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு இறங்கியது.
இந்திய மாணவர்கள் தரை வழியாக அண்டை நாடுகளான உர்மேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு அழைத்து வந்து, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.இந்த மீட்கும் பணியில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய விமான சேவை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவை தவிர இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 60 க்கும் மேற்பட்ட விமானங்களில் 16,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் இருந்து இதுவரை 771 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 181 மாணவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். அவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்து, வீடு செல்லும் வரை தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், உக்ரைனின் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்து வர நடவடிக்கைகாக ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதனிடையே உக்ரைனில் 5,000-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் இருக்கும் நிலையில் இதுவரை 2,221 தமிழக மாணவர்கள் மட்டும் தான் பதிவு செய்துள்ளதாக கூறினார். கடைசி மாணவரை மீட்கும் வரை தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசின் நிலைப்பாட்டை மத்திய அரசிடம் தெரிவித்து, மீட்புப்பணியில் தனிக் குழு ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார.
கார்கிவ் பகுதியில் உணவு,குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டோம் என்றும் கல்லூரி விடுதிகளில் இருந்தவர்களுக்கு உணவு கிடைத்தது என்றும் மீட்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர். நாங்கள் இருந்த பகுதிகளில் குண்டுகள் அதிகளவில் வீசப்பட்டன என்று அதிர்ச்சியில் இருந்து மீளாமல் மாணவர்கள் பேசினர். மேலும் சுரங்கங்கள், மெட்ரோ நிலையங்கள், பாதாளத்தில் 5 நாட்கள் பதுங்கி இருந்ததாகவும் கூறினர்.முன்னதாக, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க எம்.பி., எம்எல்ஏ-க்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். டெல்லியில் தங்கியுள்ள இக்குழுவினர்,உக்ரைனில் இருந்துவரும் மாணவர்களை தமிழகத்துக்கு தனி விமானம் மூலம் அனுப்பும் நடவடிக்கையை எடுத்து வருகிறது.