ஆந்திராவில் இருந்து கடத்தப்படும் சிலிக்கான் மணலை தடை செய்ய வேண்டும் – மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை…
திருவள்ளூர்
ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் வழியாக பல இடங்களுக்கு கடத்தப்படும் கடல் மணல், சிலிக்கான் கலப்பட மணலை தடை செய்ய வேண்டும் என்று மணல் லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர், மாவட்டத் தலைவர் யுவராஜ் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கே.முத்து மற்றும் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அந்த மனுவில், “ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கடல் மணல் மற்றும் சிலிக்கான் கலப்படம் செய்யப்பட்ட மணல் கடத்தப்படுகிறது. இந்த மணலைக் கொண்டு கட்டடங்கள் கட்டும்போது விரைவில் சரிந்து விழும்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக கடல் மணல், சிலிக்கான் கலப்பட மணல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய பகுதிகளுக்குக் கொண்டுச் சென்று விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மணலைக் கொண்டு கட்டப்படும் கட்டடங்கள், இயற்கை பேரிடர்களின் போது சீட்டுக் கட்டு போல் சரியும்.
எனவே இதுபோன்ற கலப்பட மணலை தடை செய்ய வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.