Smartcard for Actress Kajal Aggarwal

ஓமலூர் அருகே கமலாபுரம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் வினியோகிக்கப்பட்ட ஸ்மார்ட்கார்டில் நடிகை காஜல் அகர்வால் புகைப்படம் இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிகாரிகளின் குளறுபடி, பதிவேற்றுபவர்கள் அலட்சியம் ஆகியவற்றால், உண்மையான குடும்பத்தலைவர்களின் புகைப்படம் இடம் பெறுவதற்கு பதிலாக பலரின் புகைப்படம் வருவதாக குடும்பத்தலைவர்களும், பெண்களும் புலம்பி வருகின்றனர்.

தமிழகத்தில் ரேஷன்கார்டுக்கு பதிலாக ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடந்து வருகிறது. இதில்ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, சென்னையில் இருந்து ஸ்மார்ட்கார்டு அச்சடிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

அவ்வாறு அச்சடித்து அனுப்பப்படும் ஸ்மார்ட்கார்டுகளில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக மக்கள் நாள்தோறும் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். குடும்பத்தலைவர் புகைப்படம் மாறுவது, முகவரி மாறுவது, குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் மாறுவது, விடுவது என ஏராளமான குளறுபடிகள் நடக்கின்றன.

இதனிடையே சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கமலாபுரம் கிராமம், ஆர்.சி. செட்டிபட்டி கோமாளிவட்டத்தில், ஒரு ரேஷன்கடையில், வழங்கப்பட்ட ஸ்மார்ட்கார்டில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம் பெற்று இருந்தது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 70 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுவிட்டது.

இதில் பெரியசாமி என்பவரின் மனைவி சரோஜாவுக்கு நேற்றுமுன்தினம் ஸ்மார்ட்கார்டு வழங்கப்பட்டது. அதில் குடும்பத்தலைவர் சரோஜா புகைப்படம் இருக்கும் இடத்தில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம் பெற்று இருந்தது.

இது குறித்து சரோஜா ரேஷன்கடை ஊழியரிடம் சென்று முறையிட்டார். அதற்கு அவரோ, ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் சென்று புகைப்படத்தைக் கொடுத்தால் மாற்றிக்கொடுப்பார்கள் என்றும், அதுவரை இந்த கார்டிலேயே பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். இது அப்பகுதி மக்களிடையை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் ஸ்மார்ட்கார்டு வழங்கப்படாத நிலையில், இந்த குளறுபடிகளால் இனி என்னவெல்லாம் நடக்கப்போகுதோ என அங்கிருந்த மக்கள் புலம்பினர்.