3000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி…செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள 3000 அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள் செய்து தரும் வகையில் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதில் இருந்தே பல அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுதேர்வு என்ற அறிவிப்பு உள்பட பல அறிவிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றன.
இதே போல் பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த சட்டப் பேரவையில் சட்டசபையில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழகம் முழுவதும் 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்…486 அரசு பள்ளிகளில் கணினி வழி கற்றல் மையங்கள் அமைக்கப்படும்…
ரூ.30 கோடி செலவில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்படும்…3 கோடி ரூபாய் செலவில் 32 மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்… 4084 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அந்த அறிவிப்புகள் எல்லாம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள 3000 அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள் செய்து தரும் வகையில் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படும் என்று செங்கோட்டையன் உறுதி அளித்தார்.