சிங்கம்-2 பாணியில் பாஸ்போர்ட் இல்லாமல் திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரியர்கள் ஆறு பேர் கைது;
திருப்பூர்
பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட போன்ற உரிய ஆவணங்கள் இல்லாமல் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரியர்கள் ஆறு பேரை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பனியன் நிறுவனங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பனியன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களும் இங்கே தங்கி இருந்து பனியன் வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள்.
இப்படி, திருப்பூரில் தங்கி இருக்கும் நைஜீரியர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருக்கின்றனராம். இவர்களை காவலாளர்கள் அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த கே.ஜி.நகரில் தங்கி இருந்து பனியன் வர்த்தகத்தில் ஈடுப்பட்டு வரும் நைஜீரியர்கள் சிலரிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்றும், அவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகவும் அனுப்பர்பாளையம் காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாநகர காவல் ஆணையர் நாகராஜன் உத்தரவின்பேரில் அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜன்பாபு தலைமையில் காவலாளர்கள் நேற்று காலை நைஜீரியர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்றனர்.
அப்போது, அங்கிருந்த ஆறு நைஜீரியர்களை அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில் அவர்களிடம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லை என்றும், அவர்களுடைய சொந்த நாட்டில் வழங்கப்பட்ட அடையாள அட்டையும் இல்லை என்றும் தெரியவந்தது.
இதனையடுத்து நுவான்க்பே ஒனேகாக் (31), நிக்கோலஸ் உச்சேனா யூசிப் (38), ஒனாஜிடே (31), நெல்சன் ஓ பேக்போ (32), நுவோனு ஓ க்வூடி (34), டாய் டினேபில்சி (35) ஆகிய ஆறு பேரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.
பின்னர், அவர்களை திருப்பூர் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலாளர்கள், அவர்களை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.