நேருக்கு நேர் மோதி விபத்து.. அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து.. 18க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்..
மயிலாடுத்துறை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் புதுச்சேரி அரசுப் பேருந்தும், தமிழக அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 18 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் புறவழிச்சாலையில் கோவில்பத்து ஊர் அருகே பொறையாரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசுப் பேருந்தும் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற புதுச்சேரி அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான இடத்தில், நான்கு வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. மேலும் அதற்காக அங்கு பாலமும் கட்டப்பட்டு வருகிறது. இதனால் சாலை குறுகியதாக உள்ளதால், எதிரெதிர் திசையில் வந்த இரு பேருந்துகளும் ஒரே நேரத்தில் கடக்க முற்பட்டப் போது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க:உஷார் மக்களே!! கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. ஆற்றில் குளிக்கவும் செல்பி எடுக்கவும் தடை..
இந்த விபத்தில் புதுச்சேரி அரசு பேருந்தின் முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. மேலும் இரண்டு அரசு பேருந்துகளில் பயணித்த 18 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரையும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மீட்டு, உடனடியாக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்தால் சீர்காழி புறவழிச்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க:மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பு.! காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..பொதுமக்கள் வெளியேற்றம்