Asianet News TamilAsianet News Tamil

ஒரே புகைப்படத்துடன் பல ஸ்மார்ட் குடும்ப அட்டைகள்; குளறுபடியால் பொங்கல் பரிசுகளை பெற முடியாமல் மக்கள் அவதி...

single photo in Multiple smart family cards People can not afford pongal presents ...
single photo in Multiple smart family cards People can not afford pongal presents ...
Author
First Published Jan 8, 2018, 8:30 AM IST


திருவள்ளூர்

ஒரே புகைப்படத்துடன் பல பேருக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு குளறுபடியால் பொங்கல் பரிசுப் பொருள்களைப் பெற முடியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

தமிழகத்தில் கடந்தாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியது. அது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆதார் அடையாள அட்டையிலிருந்து புகைப்படத்தை ஸ்கேன் செய்து ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருவதால் இதில் பல குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் திருத்தணியில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் குடும்ப அட்டைகளில் பலரது புகைப்படங்கள் தவறாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒரே புகைப்படத்துடன் பல பேருக்கு ஸ்மார்ட் அட்டைகளும், ஒரே குடும்பத்தில் இருவருக்கு ஸ்மார்ட் அட்டைகளும் என பல விதமான பிரச்சனைகள் எழுந்துள்ளன.

குடும்ப அட்டைதாரர்கள் இவற்றை சரி செய்வதற்கு தாலுக்கா அலுவலகத்திற்கும், வட்ட வழங்கல் அலுவலகத்திற்கும் நடையாய் நடந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, ம.பொ.சி சாலை பகுதியைச் சேர்ந்த லால் முகமது, சந்து தெருவைச் சேர்ந்த ரேகா, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த கருணாகரன் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டைகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரமேஷின் புகைப்படம் பதிவாகி இருந்தது.

கண்ணபிரான் நகரைச் சேர்ந்த ரவிக்கும் அவரது மனைவிக்கும் ஒரே முகவரியில் இரண்டு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல புகைப்படங்கள் மாறியும், பெயர்கள் மாறியும், முகவரிகள் தவறாகவும் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படுவதால், குடும்ப அட்டைதாரர்கள் பலரும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

ஸ்மார்ட் அட்டை பெறாதவர்களுக்கும் ரேசன் பொருள்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், பொங்கலை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் பரிசுப் பொருள்களை வாங்கச் சென்றவர்களின் ஸ்மார்ட் அட்டைகளில் புகைப்படம் மாறி இருந்ததால் அவர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்படவில்லை.

இதனால், "ஸ்மார்ட் அட்டைகளை குளறுபடிகள் இல்லாமல் கவனத்துடன் தயாரித்து வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios