பட்டு கூட்டுறவு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் மூன்று பேர் பணி இடைநீக்கம்; முறைகேடு புகார் எதிரொலி...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் முறைகேடு புகார் எதிரொலியாக பட்டு கூட்டுறவு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் மூன்று பேரை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை பணி இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், காந்தி சாலையில் 60 ஆண்டுகளாக இயங்கி வருகிறது முருகன் பட்டு கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம்.
இந்தச் சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று புகார்கள் வந்ததால் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் முனியநாதன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.
அந்த உத்தரவின்பேரில், கைத்தறித்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது இச்சங்கத்தில் பட்டு சேலை இருப்பு குறைவாக இருந்தது. மேலும், இச்சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதா? என்று தொடர் விசாரணையில் கைத்தறித்துறை உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே இச்சங்கத்தில் நிர்வாக இயக்குனராக இருந்த இரா.மோகன்குமார், சங்கத்தின் மேலாளர் எ.முருகானந்தம், சங்க வடிவமைப்பாளர் கருணாநிதி ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.