கர்நாடகாவை கலக்கும் சசிகலா !! சித்தராமையா அரசுக்கு கடும் நெருக்கடி…
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சிறப்பு சலுகைகள் பெற்றதாக எழுந்த புகாரையடுத்து கர்நாடக மாநில சித்தராமையா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சிறப்பு சலுகைகள் பெற்றதாக எழுந்த புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, இது தொடர்பாக அடுத்தடுத்து அறிக்கைகள் வெளியிட்டும், பேட்டி அளித்தும் கடும் நெருக்கடியை உண்டாக்கி வருகிறார்.
இதையடுத்து டிஜிபி சத்யராராயண ராவ், ரூபா உள்ளிட்ட அனைரும் கூண்டோடு மாற்றப்பட்டனர். அதே நேரத்தில் சசிகலாவுக்கு சிறையில் ஒதுக்கப்பட்ட 5 அறைகள், சசிகலா சுதந்திரமாக சாதாரண உடையில் சிறைக்குள் நடமாடுவது போன்ற காட்சிகள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் துணை முதலமைச்சர் அசோக் தலைமையிலான பொதுக் கணக்குக்குழு முன்பு ஆஜரான கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜி ரேவண்ணா உள்ளிட்ட சிறை அதிகாரிகள் , சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி செய்து கொடுத்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டனர்.
இந்த விவகாரத்தில் முன்னாள் கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் பரமேஸ்வருக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவலும் தற்போது சித்தராமையா அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.