தமிழ் கலாச்சாரம், மொழி உணர்வு மங்காமல் இருக்க உறுதிமொழி எடுக்க வேண்டும் - டில்லி முன்னாள் சிறப்பு பிரதிநிதி
தேனி
தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழி உணர்வு மங்காமல் இருக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டில்லி முன்னாள் சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன் கேட்டுக் கொண்டார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லுாரியில் குணங்குடியார் தமிழ் பேரவை துவக்கவிழா நடைப்பெற்றது.
இதற்கு கல்லுாரி தாளாளர் மற்றும் செயலர் எம்.தர்வேஷ்முகைதீன் தலைமை தாங்கினார்.
முதல்வர் முகமது மீரான் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் பேரா.அப்துல்சமது வரவேற்றார்.
இதில், டில்லி முன்னாள் சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன் பங்கேற்று பேசியது:
''இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்மொழி தேய்ந்து வருகிறது. அதன் பயன்பாடு குறைந்து வருகிறது. மாணவர்கள் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழி உணர்வு மங்காமல் இருக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிற மொழிகளை பயன்படுத்துவது தவறில்லை. ஆனால் நமது தாய்மொழியாம் தொன்மை வாய்ந்த தமிழை மறக்க கூடாது” என்று பேசினார்.