சாலையில் நடப்பவர்களுக்கு கூட தமிழகம் பாதுகாப்பில்லையாம்…. மத்திய அரசின் ஆய்வறிக்கையில் “பகீர்”
தமிழக சாலை பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்களுக்குதான் பாதுகாப்பில்லாமல் இருக்கிறது என்றால் நடந்து செல்லும் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நாள்தோறும் சாலையில் நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கி 8 பேர் இறக்கின்றனர் என்றும், நாட்டில் சாலைநடந்து சென்று விபத்தில் சிக்கி இறப்பவர்களில் 20 சதவீதம் தமிழகத்தில் நடக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துக்கள்-2016 என்ற தலைப்பில் மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதில் கூறியருப்பதாவது-
கடந்த 2016ம் ஆண்டு சாலையில் நடந்து சென்றவர்கள் மீது வாகனம் மோதியதில் 15 ஆயிரத்து 746 பேர் இறந்துள்ளனர்.
இதில் தமிழகத்தில் மட்டும் 2,966 பேர் பலியாகியுள்ளனர். சாலையைக் கடக்கும் போது இறக்கும் மக்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கிறது. கடந்த 2016ம்ஆண்டில் சாலையைக் கடக்க முயன்று 28 ஆயிரத்து 397 விபத்துக்கள் நடந்துள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 5 ஆயிரத்து 848 விபத்துகள் நடந்துள்ளன. அதில் ஆயிரத்து 493 பேர் பலியாகியுள்ளனர், 5ஆயிரத்து 719 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே நடக்கும் விபத்துக்களிலும் தமிழகமே முதலிடத்தில் இருக்கிறது என்பது வேதனையளிப்பதாகும். 2016ம் ஆண்டில் 5 ஆயிரத்து 10 விபத்துக்கள் நடந்துள்ளன. அதில் ஆயிரத்து 207 பேர் இறந்துள்ளனர், 6 ஆயிரத்து 233 பேர் காயமடைந்துள்ளனர்.
தமிழக அரசு சாலையை அகலப்படுத்தும் போது, அதோடு சேர்த்து பாதசாரிகள் நடக்கும் பாதையையும் அகலப்படுத்துவது அவசியமாகும். பாதசாரிகள் மீது வாகனம் மோதி நடக்கும் விபத்துக்களில் 25 சதவீதம் தமிழகத்தில் மட்டும் நடக்கிறது. கடந்த 2016ல் 46 ஆயிரத்து 823 விபத்துக்கள் நடந்ததில், 11 ஆயிரத்து 196 விபத்துக்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. இதில் 2 ஆயிரத்து 892 பேர் உயிரிழந்தனர், 10 ஆயிரத்து 627 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து சாலை போக்குவரத்து பிரச்சனைகள் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்திவரும் தனியார் தொண்டுநிறுவனமான தோழன் அமைப்பின் எம். ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ சாலையில் நடப்பவர்களுக்கென தனியாக கொள்கை இல்லாதநகரம் சென்னைதான். மக்கள் நடக்கும் பாதைகளில் சிறுகடைகள், வாகனங்களை நிறுத்துதல், அரசியல் கட்சிகளின் ேபனர்கள் வைப்பதால், மக்கள் சாலையில் நடக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். அதனால், வாகனங்கள் அவர்கள் மீது மோதி விபத்துஏற்படுகிறது. பாதசாரிகள் நடக்கும் இடம், அவர்களுக்கான உரிமை குறித்து விழிப்புணர்வு மக்களுக்கு குறைவாக இருக்கிறது” என்றார்.