பல நாள் திருடன் அகப்பட்டான் - 20½ சவரன் நகைகள், ரூ.30 ஆயிரம் பணம் மீட்பு...
கரூர்
கரூரில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை காவலாளர்கள் கைது செய்து அவரிடம் இருந்து 20½ சவரன் தங்க நகைகளை மீட்டனர்.
கரூர் நகர எஸ்.பி. நகரைச் சேர்ந்த கந்தசாமி (50) என்பரவது வீட்டில் சமீபத்தில் 19 சவரன் தங்க நகைகள் திருட்டுப் போனது.
இதேபோல ராமகிருஷ்ணபுரத்தில் பிரதீப் வீட்டில் செல்போன், கேமரா மற்றும் ரூ.20 ஆயிரமும், அமிர்தாம்மாள் நகரில் தியாகராஜன் வீட்டில் 1½ சவரன் நகையும் திருட்டு போனது. சின்ன ஆண்டாங்கோவிலில் சங்கீதா என்பவரது வீட்டில் ரூ.12 ஆயிரம் திருட்டு போனது.
இதுபோன்று கரூர் நகர பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்ததால் மர்மநபர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்தரவின் பேரில் நகர காவல் துணை கண்காணிப்பாளர் கும்மராஜா மேற்பார்வையில் நகர ஆய்வாளர் பிருத்விராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே லந்தக்கோட்டை பக்கம் ஸ்ரீரங்கபட்டியைச் சேர்ந்த வீரமணி (21) என்பவரை தனிப்படை காவலாளர்கள் நேற்று முன்தினம் கரூரில் கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து 20½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம், செல்போன் மற்றும் கேமரா ஆகியவை மீட்கப்பட்டன.
கைதான வீரமணியை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தி நேற்று திருச்சி சிறையில் அடைத்தனர்.