சுங்கச் சாவடி ஊழியரை தாக்கிய ஏழு பேர் கைது... சாவடியின் கண்ணாடியை உடைத்து தகராறு...
திருவள்ளூர்
திருவள்ளூரில் உள்ள கள்ளிக்குப்பம் சுங்கச் சாவடி ஊழியரை தாக்கியும், சுங்கச் சாவடியின் கண்ணாடியை உடைத்தும் தகராறில் ஈடுபட்ட ஏழு பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
சென்னை தாம்பரத்திலிருந்து மணலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அம்பத்தூர் - கள்ளிக்குப்பம் அருகே சுங்கச் சாவடி ஒன்று உள்ளது.
இந்த வழியாக திங்கள்கிழமை இரவு காரில் வந்த போரூர் காரம்பாக்கத்தைச் சேர்ந்த கார் மெக்கானிக் அஜய் (20), தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் கேப்ரியல் (19) ஆகியோர் சுங்கக் கட்டணம் தர மறுத்து, சுங்கச்சாவடி ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டனராம்.
அப்போது, கேப்ரியல் தனது செல்போன் மூலம் நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, அவரது கல்லூர் நண்பர்கள் ஐந்து பேர் மூன்று கார்களில் வந்துள்ளனர்.
இவர்கள் ஏழு பேரும் சேர்ந்து அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கியதுடன், சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தினர்.
இதுகுறித்து சுங்கச்சாவடி மேற்பார்வையாளர் ஸ்ரீதர், அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆய்வாளர் பொற்கொடி தலைமையில் காவலாளர்கள் நிகழ்விடத்துக்கு வந்து ஏழு பேரையும் கைது செய்ததுடன் நான்கு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
இதனால் மணலி - தாம்பரம் மேம்பாலப் பாதையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.