நீங்க கொடுக்கிற இடம் தான்! தேச விரோத கும்பலுக்கு எந்த அளவு ஊக்கம் அளிக்குது பார்த்தீங்களா? எல். முருகன்!
சாலையோர தடுப்புகளில் இந்தியாவிற்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
![Separatist campaign in Tamil Nadu in the name of anti-NEET... L.Murugan tvk Separatist campaign in Tamil Nadu in the name of anti-NEET... L.Murugan tvk](https://static-ai.asianetnews.com/images/01hk94ezxbss840803w3qetp0w/l-murugan_363x203xt.jpg)
நீட் தேர்வை எதிர்க்கிறேன் என்ற பெயரில் பிரிவினைவாத பிரச்சாரங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன என மத்திய இணையமைச்சர் எல். முருகன் எச்சரித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில், சாலையோர தடுப்புகளில் இந்தியாவிற்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை போலீசார் சுண்ணாம்பு பூசி அழித்துள்ளனர். இந்த வாசகங்களை எழுதியது யார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வாசகங்கள் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் நீட் வெறுப்பு பிரசாரம், தேச விரோத கும்பல்களுக்கு எந்த அளவிற்கு ஊக்கமளிக்கிறது என்பதற்கு சான்றுகள் தான் இவை என எல்.முருகன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அரசியலில் படித்தவர்களை விட அர்ப்பணிப்பு உள்ளவர்கள் தான் தேவை; நடிகர் விஜயின் கருத்துக்கு வானதி சீனிவாசன் பதில்
இதுகுறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: நீட் வெறுப்பு போர்வையில் பிரிவினைவாத பிரசாரம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாரா?
தமிழகத்தில் திமுக கூட்டணியினர் செய்து வரும் நீட் வெறுப்பு பிரசாரம், தேச விரோத கும்பல்களுக்கு எந்த அளவிற்கு ஊக்கமளிக்கிறது என்பதற்கு சான்றுகள் தான் இவை. சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில் சாலையோர சுவர்களில் நீட் எதிர்ப்பு என்ற போர்வையில் பிரிவினைவாத, தேசவிரோத கருத்துகள் அப்பட்டமாக பரப்பப்படுகின்றன. திமுக ஆட்சியில் தேச விரோத, பிரிவினைவாத கும்பல்களின் செயல்பாடு அதிகரித்து வருவது, பாரத தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வேதனைக்குள்ளாக்கும் செயல்.
இதுபோன்ற பிரிவினைவாத கும்பல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழகம் பெரும் ஆபத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டு விடும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேசவிரோத கும்பல்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.