Asianet News TamilAsianet News Tamil

செங்கோட்டையில் 144 தடை உத்தரவால் பரபரப்பு!!

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலை அடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Sengottai Section 144
Author
Tamil Nadu, First Published Sep 14, 2018, 2:17 PM IST

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலை அடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அம்மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். நேற்று இரவு நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது, இரு கோஷ்டியினரிடையே கல், பாட்டில் வீசப்பட்டது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். செங்கோட்டை அருகே மேலூரில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி வண்டிமறிச்சம்மன் கோயில் முன் பிரதிஷ்டை செய்யப்படும். Sengottai Section 144

இதையொட்டி நேற்று விநாயகர் சிலைகள், கொண்டு வரப்பட்டன.சுமார் 38 சிலைகள், மேலூர் பெரிய பள்ளிவாசல் தெரு வழியாக கொண்டு செல்வதற்கு போலீசாரிடம் அனுமதி பெறப்பட்டது. இதை தொடர்ந்து பெண்கள் உள்பட 1000 பேர், நேற்று இரவு 9.30 மணியளவில் விஸ்வநாதபுரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்றனர். அப்போது அதே தெருவை சேர்ந்த மக்கள், விநாயகர் சிலையை கொண்டு செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தடுத்து நிறுத்த சுமார் 500 பேர் திரண்டனர். 

இதையடுத்து விநாயகர் சிலை அந்த தெருவுக்கு வந்தபோது இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சிலை மற்றும் ஊர்வலத்தினர் மீதும் கல், பாட்டில் உள்ளிட்டவற்றை சிலர் வீசி தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த ஊர்வலத்தினரும், பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் குறைந்த அளவில் போலீசார் பாதுகாப்புக்கு சென்றதால் 3 போலீசார் உள்பட 10 பேர் காயமடைந்தனர். கல்வீச்சில் அப்பகுதியில் இருந்த கடைகளும் சேதமடைந்தன.Sengottai Section 144

 பின்னர் போலீசார், இருதரப்பினரையும் சமரசம் செய்து, பாதுகாப்பாக மீட்டு அனுப்பினர். விநாயகர் சிலையும் வேனில் பலத்த பாதுகாப்புடன் அதே தெரு வழியாக வண்டிமறிச்சம்மன் கோயில் முன் கொண்டுசென்று பிரதிஷ்டை செய்தனர். தகவலறிந்து தென்காசி டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவுகிறது.

 Sengottai Section 144

சேலத்தில் 25 பேர் காயம்  ஆத்தூரில், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு வழிவிடாதது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கல்வீசி தாக்கியதில் அதிமுக முன்னாள் நகரமன்ற தலைவி உள்பட 25 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். நாளை மாலை 6 மணி வரை இந்த தடை உத்தரவு இருக்கும் என்று ஆட்சியர் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 30 விநாயகர் சிலையை, அமைதியாக ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios