"ஜெயலலிதாவின் எந்தெந்த சொத்துக்கள் பறிமுதல்?" - முழு விவரம் இதோ....
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி உட்பட 6 மாவட்டங்களில் உள்ள 68 சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு நேற்று முதல் எடுத்து வருகிறது.
கடந்த 1991-96ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த நேரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்களையும் சேர்ந்து வழக்கு பதிவு செய்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.
21 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா 2014 ல், ஜெயலலிதா உள்பட 4 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்து, 4 பேருக்கும் தலா 4 ஆண்டு தண்டனையும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி, மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 1135 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பினை ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14 அன்று இந்தத் தீர்ப்பை பினாகி சந்திரகேஷ், அமிர்தவராய் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் உறுதி செய்தது. வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா இறந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு தற்போது 4 பேருக்கும் சொந்தமான 68 சொத்துகளை கைப்பற்றுமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பக இயக்குனர் மஞ்சுநாதா தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
மாநில அரசின் உத்தரவின்படி இந்த சொத்துகளைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை தொடங்குமாறு 6 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் அனுப்பிய கடிதத்தில் மாநில கண்காணிப்பு ஆணையருக்கும் அனுப்பபட்டுள்ளது. மொத்தம் 128 சொத்துக்களை நீதிமன்றம் ஏற்கனவே கையகப்படுத்த உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அதில் தற்போது நீதிமன்றம் 68 சொத்துக்களை மட்டும் பறிமுதல் செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. அதில் 6 மாவட்டத்தில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை இன்று காலையில் மாவட்ட நிர்வாகமும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் சேர்ந்து இறங்கியுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ஹேடோஸ் சாலையில் உள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப்மென்ட் பிரைவேட் லிமிடெட்டுக்கு சொந்தமான கட்டிடம், டிடிகே சாலையில் உள்ள கட்டிடம், நீலாங்கரையில் உள்ள கட்டிடத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து இந்த சொத்துக்கள் அரசுக்கு சொந்தமானது என்று கட்டிடத்திற்கு சீலும் நிலங்களில் போர்டு வைத்தனர்.
''பறிமுதலாகும் சில சொத்துக்கள்''
ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள்;
தூத்துக்குடி மாவட்டத்தில் ரிவர்வே அக்ரோ புரோடெக்ஸ் (பி) லிட் நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு சர்வே எண்களை கொண்ட 1166.75 ஏக்கர் நிலம்.
சென்னை டிடிகே சாலையில் உள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப்மென்ட் (பி) லிட் கட்டிடம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள நிலம் மற்றும் நீலாங்கரையில் உள்ள நிலம்.
திருவாரூர் மாவட்டத்தில் ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் (பி) லிட் நிறுவனத்திற்கு சொந்தமான 29.71 ஏக்கர் நிலம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிடோவ் அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிட் நிறுவனத்திற்கு சொந்தமான 183.64 ஏக்கர் பரப்பு நிலம்.