- Home
- Politics
- கமலும், நாங்களும் ஒன்றா..? திமுகவின் மத்தளத்தை உடைக்கும் கூட்டணி கட்சி..! ஸ்டாலின் ஷாக்..!
கமலும், நாங்களும் ஒன்றா..? திமுகவின் மத்தளத்தை உடைக்கும் கூட்டணி கட்சி..! ஸ்டாலின் ஷாக்..!
வட மாவட்டங்களில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு நாங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை நிரூபித்திருக்கிறோம். கூட்டணியில் இருக்கக்கூடிய மற்ற கட்சிகளை விடவும் எங்களுடைய வாக்குகளை முழுமையாக திமுக அணிக்கு மடைமாற்றி இருக்கிறோம்.

புதிய கட்சிகளுக்கு அள்ளிக் கொடுக்கும் திமுக
மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல திமுகவை காங்கிரஸ் ஒரு பக்கம் பாடாய் படுத்தி எடுக்கிறது. இந்நிலையில் இன்னொரு பக்கம் இதர கூட்டணி கட்சிகளும் அதிருப்தி குரலை வெளிப்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். 2021ல் பெற்ற தொகுதியை மறுபடியும் பெற்றுக்கொள்ளுங்கள் என எங்களிடம் சொல்லிவிட்டு, புதிய கட்சிகளுக்கு திமுக அள்ளிக் கொடுக்க ஆயத்தமாவது எப்படி? என கொந்தளிக்கிறார்கள் ஏற்கெனவே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியினர்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய வேளையில் மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது எடப்பாடி தலைமையிலான என்.டி.ஏ. விஜயும் கணிக்க முடியாத சத்தியாக இருப்பதால் மிகவும் சீரியஸாக கூட்டணி காய் நகர்த்தி வருகிறது அறிவாலயம். அருதி பெரும்பான்மையுடன் வெற்றிபெற கூட்டணியை உறுதி செய்ய அதிமுக அதிக தொகுதிகளில் களமிறங்கும் முனைப்பில் இருக்கிறது திமுக. 2021ல் விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமை போன்ற கட்சிகளுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. அதையே மறுபடியும் தருகிறோம். கூடுதல் சீட்டுக்கு வாய்ப்பு இல்லை என கைவிரிக்கிறது திமுக.
பாமகவுக்கு இணையான கிளை கட்டமைப்பு
கூட்டணிக்கு புதிதாக தேமுதிக உள்ளே இழுப்பதற்காக 6 லிருந்து 8 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட், சின்ன கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டும் தருவதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது திமுக. இது கூட்டணி கட்சிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ஐக்கியமானது தமிழக வாழ்வுரிமை கட்சி. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அப்போதே ஒரு எம்.பி சீட் கேட்டார் அவருக்கு 2021ல் ஒரே ஒரு எம்எல்ஏ சீட்டை கொடுத்தது திமுக. அதே போல 2024 பாராளுமன்ற தேர்தலிலும் ஒரு எம்பி சீட் கேட்ட அவருக்கு, 2026 சட்டமன்ற தேர்தலிலும் ஒரே ஒரு எம்எல்ஏ சீட்டை தர முன்வந்து இருக்கிறது. இதனால் கடுமையான கொந்தளிப்போடு காணப்படுகிறார்கள் வேல்முருகன்.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘‘சாதி கட்சியாக நாங்கள் செயல்படவில்லை. அப்படி இருந்தும் வட மாவட்டங்களில் வன்னியர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறார் வேல்முருகன். திமுக கூட்டணியில் இணைந்த இந்த எட்டு ஆண்டுகளில் வடமாவட்டங்களில் பாமகவுக்கு இணையான கிளை கட்டமைப்பை உறுதி செய்து இருக்கிறோம். சுப.உதயகுமாரின் பச்சை தமிழகம் கட்சியை தமிழக வாழ்வுரிமை கட்சியுடன் இணைத்திருக்கிறோம். பேரணி, பொதுக்கூட்டம் என விசிக போல நாங்களும் பயங்கர ஆக்டிவாகத்தான் இருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு தேர்தலிலுமே தொகுதி பங்கீட்டின் போது எங்களை திமுக அவமானப்படுத்துகிறது. மக்கள் நீதி மையத்துக்கு மூன்று தொகுதிகள் என பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
தேமுதிகவுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?
வேல்முருகனை விட கமல்ஹாசன் என்ன அரசியல் செய்தார்? சாதி கட்சியை வைத்திருக்கும் கருணாஸ், தனியரசு உள்ளிட்ட பலருக்கும் ஒரு சீட் தரம முன்வந்து இருக்கிறது அறிவாலயம். அவர்களைப்போலவே எங்களையும் அனுகுவது எந்த விதத்தில் நியாயம்? கள நிலவரம் தெரியாமல் திமுக நடந்து கொண்டு எரிச்சலடைய வைக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 60 இடங்களில் போட்டியிட்டு 2 லட்சத்து 157 வாக்குகளை பெற்றிருந்தது தேமுதிக. வாக்கு வங்கி 0.4 சதவீதம் தான். எந்த ஒரு செயல்பாடும் இல்லாத அந்த கட்சியை கூட்டணியில் இணைக்க வேண்டும் என முனைப்போடு ஆறு சீட்டுகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டையும் கொடுக்க முன்வருகிறது திமுக தலைமை. பொது சமூகத்தினர் மத்தியிலும் பல மடங்கு கவனம் பெற்றுள்ளோம். 234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.
வட மாவட்டங்களில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு நாங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை நிரூபித்திருக்கிறோம். கூட்டணியில் இருக்கக்கூடிய மற்ற கட்சிகளை விடவும் எங்களுடைய வாக்குகளை முழுமையாக திமுக அணிக்கு மடைமாற்றி இருக்கிறோம். ஆனால் தேர்தலில் நாங்கள் கேட்கக்கூடிய தொகுதிகளை அவர்கள் தருவதே கிடையாது. அதேவேளையில் வெளியிலிருந்து உள்ளே வரும் குறிப்பிட்ட கட்சிக்கு எங்களைவிடவும் கூடுதல் தொகுதிகளை திமுக தர முன் வருவதாக வரும் தகவல்கள் வருத்தத்தை தருகிறது. மற்றவர்களுக்கு எவ்வளவு சீட் வேண்டுமானாலும் திமுக கொடுக்கட்டும். ஆனால் எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும்.
நாங்களும் சிறிய கட்சிகளும் ஒன்றா..?
வேல்முருகனையும், சிறிய கட்சிகளையும் ஒரே மாதிரியாக கருதக்கூடாது. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகளை உயர்த்தாமல், தேமுதிகவுக்கு அதிகமாகவும், அதே எண்ணிக்கையிலோ கொடுக்க முன்வந்தால் வருத்தம் உண்டாவதில் நியாயம் இருக்கிறது. ஆட்சிக்கு உறுதுணையாக 5 ஆண்டுகளும் இருந்த கூட்டணி கட்சிகளுக்கு கேட்கும் தொகுதிகளை கொடுக்காமல், புதிதாக வரும் கட்சிகளுக்கு தனக்கான தொகுதிகளில் இருந்து வழங்க திமுக தலைமை முன்வருவது எப்படி நியாயம்? என கேள்வி எழுப்புகின்றனர். கூட்டணியில் சலசலப்புகளை தவிர்க்கலாம். இந்த சவாலான விவகாரத்தை திமுக எப்படி கையாளப்போகிறது திமுக..?
