வரி நிலுவைகளை செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல் - மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை...
திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய வரி இன நிலுவைகளை செலுத்த தவறும் நபர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், "திருநெல்வேலி மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலி மனை வரி, தொழில் வரி மற்றும் கடை வாடகை ஆகிய வரி மற்றும் வரியில்லா இன நிலுவைகளை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதிலும் குறிப்பாக, "ஆட்டோ வாகனம் மூலம் அறிவிப்பு செய்தல், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்தல், அதிகமான நிலுவை தொகை வைத்துள்ள நபர்களின் பெயர் பட்டியலை மாநகராட்சி அலுவலக வளாகங்களிலும், மாநகரத்தின் முக்கிய இடங்களில் பிளக்ஸ் போர்டு மூலம் மக்களின் பார்வைக்கு வைத்தல்" போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கு பின்பும் நிலுவை வரி இனங்களை செலுத்த தவறிய நபர்களிடம் இருந்து வரியை வசூலிக்கும் பொருட்டு தெருக்கள் வாரியான நிலுவைதாரர்கள் பெயர் பட்டியலை அந்தந்த தெருக்களில் பிளக்ஸ் போர்டு மூலம் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னரும் வரி இன நிலுவைகளை செலுத்த தவறும் நபர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணியை மேற்கொள்ள மாநகராட்சி தீவிரமாக நடவடிக்கை எடுக்க உள்ளது.
எனவே நிலுவை வரி விதிப்புதாரர்கள் இதுபோன்ற சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை தவிர்க்கும் பொருட்டும், பொதுநலனை கருத்தில் கொண்டும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை உடனடியாக செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.