விஜயகாந்த் பார்க்கதான் கம்பீரமாக இருப்பார். ஆனால் பேசி பழகுவதில், மனது அளவில் அவர் ஒரு குழந்தைதான் என சீமான் கூறியுள்ளார். 

விஜயகாந்த் இடத்தை வேண்டும் என்றால் பூர்த்தி செய்ய ஒருவர் வரலாம். ஆனால் அவரைப்போல சிறந்த மனிதர் ஒருவர் வருவது கடினம் என சீமான் கூறியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலை காலமானார். அவரது உடலுக்கு ரசிகர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி அவரது நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- விஜயகாந்த் என்றால் அச்சமின்மை, துணிவுதான். எதற்கும் பயப்படமாட்டார். தவசி படத்தில் பணியாற்றும்போது அவருடன் மனம்விட்டு பேசுகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது தான் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. அவரைப்போல சிறந்த மனிதர் கிடைப்பது அரிது. ரஜினி, கமல் போன்றோர்கள் விஜயகாந்த் சொன்னால் கேட்பார்கள். விஜயகாந்த் பார்க்கதான் கம்பீரமாக இருப்பார். ஆனால் பேசி பழகுவதில், மனது அளவில் அவர் ஒரு குழந்தைதான்.

விஜயகாந்த் நலமுடன், உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் போக்கே மாறி இருக்கும். விஜயகாந்த் இடத்தை வேண்டும் என்றால் பூர்த்தி செய்ய ஒருவர் வரலாம். ஆனால் அவரைப்போல சிறந்த மனிதர் ஒருவர் வருவது கடினம். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய அரசியல் தலைவர்கள் இருக்கும்போதே 10.5 சதவீத வாக்குகள் வாங்கி எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது என்பது சாதாரண விஷயம் அல்ல என சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.