திமுக நகரச் செயலாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை; கடைசியாக எழுதிய கடிதம் சிக்கியது…
புதுக்கோட்டை
கீரனூர் தி.மு.க. நகர செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கடைசியாக எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றி காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் திமுக நகரச் செயலாளரான பழனியப்பன் (54). இவர் கீரனூர் கடைவீதியில் செருப்பு கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று காலை வழக்கம்போல கடைக்குச் சென்ற அவர், கடையின் ஒரு பக்க கதவை திறந்து வைத்துவிட்டு உள்ளே சென்றார்.
அப்போது கடைக்கு வந்த பழனியப்பனின் உறவினர் கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் பழனியப்பன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பழனியப்பனை கீழே இறக்கி சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கீரனூர் காவலாளர்கள் பழனியப்பன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து காவலாளர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. மேலும் பழனியப்பன் கடையில் இருந்து அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை காவலாளர்கள் கைப்பற்றினர்.
அதில், தான் பெற்ற கடனை சிலர் திருப்பிக் கேட்டு தொந்தரவு கொடுத்ததால், தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார் என்று காவலாளர்கள் தெரிவித்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட பழனியப்பனுக்கு ஹேமலதா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.