திருமணமான இரண்டாவது நாளே காணாமல்போன புதுமாப்பிள்ளை; ஒரு வாரம் கழித்து அழுகிய நிலையில் உடல் கண்டெடுப்பு...
நாமக்கல்
நாமக்கல்லில் திருமணமான இரண்டாவது நாளே காணாமல்போன புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரின் அழுகிய உடல் ஒரு வாரம் கழித்து கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே உள்ள வேலாகௌண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் அமாவாசை. இவருடைய மகன் மணி (25), கூலித் தொழிலாளி.
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமியின் மகள் சுகன்யாவிற்கும் (24) கடந்த 19-ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணமான இரண்டாவது நாள் அதாவது 21-ஆம் தேதி மணி வீட்டைவிட்டு வெளியேச் சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து சுகன்யா, அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இருவரின் பெற்றோரும் மற்றும் உறவினர்களும் மணியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
மணி காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று காலை பூசாரிபாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு கீழ்பகுதியில் மர்மமான முறையில் மணி இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கும், பரமத்திவேலூர் காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பரமத்திவேலூர் காவலாளர்கள் அழுகிய நிலையில் கிடந்த மணியின் உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், மணி எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? தற்கொலையா? என்று பல்வேறு கோணங்களில் பரமத்திவேலூர் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான இரண்டாவது நாளே காணாமல் போன புதுமாப்பிள்ளையின் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அந்தப் பகுதியில் காட்டுத்தீயாய் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.