பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல்…
மதுரையில் உள்ள தியாகராசர் மேல்நிலைப் பள்ளியில் ஒருவர் மற்றொருவரின் சாதிப்பெயரை கூறி இழிவாக பேசியதால் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
மதுரை திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் தியாகராசர் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இங்கு, நேற்று இரு வெவ்வேறு சாதியினரைச் சார்ந்த மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒருதரப்பு சாதியைச் சேர்ந்த மாணவர்கள், மற்றொரு சாதியைச் சேர்ந்த மாணவர்களின் சாதிப்பெயரைக் கூறி இழிவுபடுத்தி பேசியுள்ளனர். மேலும், அவர்களை கேள்விக் கேட்டதற்கு அந்த மாணவர்களை அடித்துள்ளனர். இதில், இரண்டு மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர்கள் நியாயம் கேட்டுச் சென்றனர். அவர்களையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
மாணவர்களைத் தாக்கியதும், பெற்றோர்களைத் தாக்கியதும் பள்ளி தலைமையாசிரியர் கணேஷ் முன்புதான் நடந்தது. எனினும், அவர் தட்டிக்கேட்காமல் மௌனமாக நின்றார். தலைமையாசிரியரின் இந்த செயல் பெற்றோர்களிடையை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர், இதுகுறித்து ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்பள்ளி முழுவதும் காவலாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரச்சனையில் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சாதிபெயரை கூறி தரக்குறைவாக பேசிய தாக்குதல் நடத்தினர் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில், ஆஸ்டின்பட்டி காவலாளர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.