திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கோவில் திருவிழாவில் பங்கேற்ற 15 வயது சிறுமிக்கு  பாலியல் தொல்லை.

பாலியல் தொல்லை

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கி சின்னான்பட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வெளியூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு முடித்த 15 வயது பள்ளி மாணவி தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். மாணவி தனியாக நடந்து சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ராஜபாண்டி(35) என்பவர் நைசாக பேசி மாணவியை தனி அறைக்கு இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

குடும்பத்தினர் மிரட்டல்

மாணவி பயத்தால் அலறி கூச்சலிட்டதை அடுத்து அவர் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்து சென்றுவிட்டார். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் மற்றும் மாணவியின் பெற்றோர் வந்தனர். நடந்த சம்பவத்தை கூறியதை அடுத்து மகளை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் ராஜபாண்டியின் குடும்பத்தினரிடம் தட்டிக் கேட்டபோது, நடந்ததை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

போக்சோவில் கைது

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து ராஜபாண்டி(35), மற்றும் அவரது உறவினர்கள் விஜயகுமார், காயத்ரி, சிங்கராஜ், பிரேமலதா உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கோவில் திருவிழாவுக்கு வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.