school student kills electricity when playing cricket Hands off to another student ...
திருவள்ளூர்
திருவள்ளூரில் வீட்டின் மாடியில் கிரிக்கெட் விளையாடியபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவன் ஒருவன் பலியானான். மற்றொரு மாணவனின் கையின் ஒருபகுதி துண்டிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரம், முத்துமாரி அம்மன் கோவில் தெருவில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் தனித்தனியே குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்
இங்குள்ள ஒரு வீட்டில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முகமது மனோகர் என்ற லாரி ஓட்டுநரும் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது மிராஜ் (11) அங்குள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். இவரது நண்பன் முகமது வாசிம் (13) அதே பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.
தொடர் மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அதிகாலை முதலே இந்தப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் நேற்றும் பள்ளி விடுமுறையாக இருக்கலாம் என்று எண்ணி நண்பர்கள் இருவரும் பள்ளிக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் கொட்டும் மழையில் வீட்டின் மாடியில் இருவரும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டு மாடியின் பால்கனியில் பந்து விழுந்து விட்டது. அதனை எப்படி எடுப்பது? என்று தெரியாமல் நின்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, மாடி மீது மற்றொரு தளம் அமைக்க தூண்கள் பாதி கட்டிய நிலையில் கிடந்த கம்பிகளில் நீளமான ஒரு கம்பியை எடுத்து இருவரும் பால்கனியில் விழுந்து கிடந்த பந்தை எடுக்க முயற்சித்துள்ளனர்.
முகமது மிராஜ் கம்பியின் முன்பகுதியை பிடித்தபடியும், முகமது வாசிம் கம்பியின் பின்பகுதியை பிடித்து கொண்டும் பந்தை எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது அந்த வழியேச் சென்ற உயர் அழுத்த மின்சார வயரின் மீது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி உரசியதால் இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் முகமது மிராஜ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த முகமது வாசிமுக்கு வலது கையின் ஒரு பகுதி துண்டாகி விழுந்தது.
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த முகமது வாசிமை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நசரத்பேட்டை காவலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், முகமது மிராஜ் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறியது:
இந்த பகுதிகளில் குடியிருப்பை ஒட்டி உயர் அழுத்த உயர் அழுத்த மின்சார வயர் தாழ்வாக சென்றுக் கொண்டிருக்கிறது. அதனை மாற்ற வேண்டும் என்று மின்சார வாரியத்திடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் தற்போது உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
