ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் இதுவரை 22 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குழந்தையை கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி கடிதம் எழுதிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

ஆம்ஸ்ட்ராங் கொலை

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது புதிய வீட்டின் முன்பாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் காவல்நிலையத்தில் 11 பேர் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பழிக்கு பழி வாங்கவே கொலை செய்ததாக தெரிவித்தனர். குறிப்பாக கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலைக்கு ஆம்ஸ்ட்ராங் தொடர்பு இருந்தால் கொலை செய்ததாக கூறினார். ஆனால் இந்த கொலையின் பின்னனியில் வேறு நபர்கள் இருப்பதாக கூறப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு மிரட்டல்

இதனையடுத்து குற்றவாளி திருவேங்கடம் போலீஸ் காவலில் இருந்து தப்பி செல்ல முயன்றதாக கூறி போலீசார் என்கவுண்டர் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற குற்றவாளிகள் கொலைக்கு பின்னனியில் யார் உள்ளார்கள் என்ற தகவலை வெளியே கூற தொடங்கினர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி தனது குழந்தை மற்றும் உறவினர்களுடன் வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடைபெற்ற அடுத்த ஒரு சில நாட்களில் ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் கடிதம் வந்தது. 

மிரட்டல் கடிதம்- பள்ளி தாளாளர் கைது

சதீஷ் என்பவர் பெயரில் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையை கடத்தி விடுவதுடன் அவருடயை குடும்பத்தை கொலை செய்து விடுவதாக கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தினர். யார் இந்த கடிதத்தை எழுதியது என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் அருண்ராஜை கைது செய்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியின் வாகன ஓட்டுநர் சதீஷ் என்பவரை சிக்க வைப்பதற்காக தாளாளர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாளியுள்ளது.