sasikala team cadres beated ops team member

வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்தவர் அறிவழகன். அதிமுக நிர்வாகி. குடியிருப்போர் நல சங்க நிர்வாகியாகவும் செயல்படுகிறார். தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை வெளியே சென்ற அறிவழகன், இரவு வீட்டுக்கு புறப்பட்டார். வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெரு வழியாக தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, சசிகலா அணியை சேர்ந்த வட்ட செயலாளர் லோகு என்பவர், தனது ஆதரவாளர்களுடன் வழி மறித்தார்.

அப்போது, அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், அறிவழகனை உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில், அலறி துடித்தபடி அவர் கீழே சாய்ந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். அதை பார்த்ததும், வட்ட செயலாளர் லோகு மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

பின்னர், படுகாயமடைந்த அறிவழகனை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புகாரின்படி தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வட்ட செயலாளர் லோகு உள்ளிட்டோரை வலைவீசி தேடி வருகின்றனர்.