சசிகலா பொது செயலாளர் ஆவது உறுதி – அடித்து கூறும் அதிமுக செய்தி தொடர்பாளர்
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுகவின் பொது செயலாளர் ஆவது உறுதி என அதிமுக செய்தி தொடர்பாளர் அடித்து கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் எவ்வித பயனும் இல்லாமல் கடந்த 5ம் தேதி காலமானார். 6ம் தேதி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து, அன்றைய தினமே ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால், அதிமுக பொது செயலாளர் பதவிக்கு யாரை பரிந்துரை செய்வது என அக்கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதில், ஒரு தரப்பினர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை ஆதரித்துள்ளனர். சிலர் மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக செய்தி தொடர்பாளா கவுரி சங்கர், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில், “ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நிச்சயம் அதிமுகவின் பொது செயலாளராக ஆவார்” என கூறினார். மேலும், அவர் மேலும் கூறுகையில், “ஆட்சிக்கு ஓபிஎஸ்ஸும், கட்சிக்கு சசிகலாவும் இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்பட்டு அதிமுக ஆட்சியையும் கட்சியையும் வழிநடத்துவார்கள்” என்றார்.