சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,121 அதிகரித்து 6,983 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 3,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6,983 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 44 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் நேற்று ஒரு நாள் மட்டும் 11 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,825 ஆக உள்ளது. குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனிடையே, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் விடுமுறை முடிந்து கடந்த 4ம் தேதி மருத்துவமனைக்கு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 30 மருத்துவ மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் என 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் 25ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவது டாக்டர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு நடத்திய பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சரவணா ஸ்டோர்ஸ் மூட உத்தரவிட்டுள்ளது.
