திருசெந்தூர் சுப்ரமணிசுவாமி கோவிலில் இன்று முதல் சாமி தரிசனம் செய்வதற்கான கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி ரூ.100 கட்டண தரிசனம், பொது தரிசனத்தில் மட்டுமே மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள புகழ்பெற்ற முருகபெருமான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, ரூ.250, ரூ.100, ரூ.20 கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் ரூ.250 சிறப்பு கட்டணம் மற்றும் ரூ.20 கட்டணம் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இதுதொடர்பாக திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிக்கையில் “திருச்செந்தூர் திருக்கோவிலில் நீதிமன்ற உத்தரவுபடி, இந்துசமய ஆணையர் சில நிபந்தனைகைளை உத்தரவாக பிறப்பித்தார்கள். இதன்படி ஏற்கனவே நடைமுறையில் உள்ள ரூ.250 கட்டணமும், ரூ.20 கட்டணம் ஆகிய இரு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது. 

மேலும் படிக்க: தனித்தேர்வர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு... அரசுத் தேர்வுத்துறை இயக்ககத்தின் சூப்பர் அறிவிப்பு!!

ரூ.100 கட்டணம் மற்றும் பொதுதரிசனம் மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும். இந்த தரிசன முறையிலும் மூலவரை இரு வரிசையில் வருபவர்களும் சமமாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசன முறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கோவிலில் திரிசுதந்திரர்களை கட்டுப்படுத்தும் வகையில் பல நிபந்தனைகளுடன் கூடிய உரிமைகளை வழங்கும் வகையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடையாள அட்டை வழங்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு உதவும் வகையில் இருக்கும். 

அதே போல் கோவில் பாதுகாப்பு பணியில் 125 ஆயுதபடை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். இதில் முதற்கட்டமாக 60 பேர் ஈடுபட உள்ளனர். ரூ.100 கட்டணம் தரிசனம் மற்றும பொது தரிசன முறையில் வரும் பக்தர்கள் மகா மண்டபத்தில் ஒரே வழியில் அனைத்து பக்தர்களும் சமமமாக சென்று மூலவரை தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 3500 மெட்ரிக் டன் நெல் நாசம்... அலட்சியமே காரணம்... விவசாயிகள் குற்றச்சாட்டு!!

பக்தர்கள் எவ்வித சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு மாற்றங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளது. விஐபி தரிசனத்திற்கு தனிநேரம் ஒதுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. கோவிலில் கைங்கரியம் செய்யும் திரிசுதந்திரர்கள் தங்கள் பெயர்களை கோயிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். திரிசுதந்திரர்கள் பக்தர்களை தரிசனத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி முறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் 15 நாட்கள் சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.