ஓய்வு பெற்ற பிறகு அரசியல் பிரவேசம்? - என்ன சொல்கிறார் சகாயம்?
விவசாயிகள் மாரடைப்பால் மரணம் அடைவதும், தற்கொலை செய்து கொள்வதும் சமூக அவமானம் என்றும் , இது தேசம் எதிர்கொள்ளும் அபாயத்தின் அறிகுறி என்றும் சகாயம் ஐஏஎஸ் தெரிவித்தார்.விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மதுரையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய சென்னை அறிவியல் நகரம் துணைத் தலைவர் சகாயம் , நமது வாழ்க்கை, வளத்திற்கு ஆதாரம் விவசாயிகள். அவர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று தெரிவித்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், டில்லியிலும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர் என்றும் , வறுமை மற்றும் வேளாண்மை பொய்த்துப் போனதால் விவசாயிகள் மரணம் மற்றும் தற்கொலை செய்து கொள்வது சமூக அவமானம் என்றார்.
இதை புறந்தள்ள முடியாது என்றும், இது தேசம் எதிர்கொள்ளும் அபாயத்தின் அறிகுறி என்றும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கை வெல்ல வேண்டும் என்றும் இதனை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சகாயம் தெரிவித்தார்.
இளைஞர்கள் உங்களை முன்மாதிரியாகக் கொண்டு, நம்பிக்கை வைத்துள்ளனரே? பணி ஓய்விற்கு பின் எதுவும் திட்டம் உள்ளதா?' என கேள்வி எழுப்பியபோது, லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன், எம் அருகில் உள்ளனர்…எம்முடைய இலக்கு தேர்தல் அரசியலைத் தாண்டி, தமிழகத்தின் அடுத்த தலைமுறையை நேர்மையான, நியாயமான சமூகமாக வென்றெடுப்பதுதான் என தெரிவித்தார்.
விழிப்புணர்வுள்ள இளைஞர் கூட்டம் அரசியல், பொருளாதாரம், விவசாயம், சமூக தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் நம்பிக்கை உண்டு என்றும் தமிழ் சமூக மேம்பாடு, விடியலுக்கான பணியை செய்ய உள்ளதாகவும் சகாயம் தெரிவித்தார்.