மணவாளக்குறிச்சி,
கன்னியாகுமரி மாவட்டத்தின் மணவாளக்குறிச்சி என்ற பகுதியில் கல்படி குளம் ஒன்று இருக்கிறது. இந்த குளத்தின் அருகே உள்ள புதரில் சிதைந்து போன சாக்கு மூடை கிடந்தது.
இதனைக் கண்ட வெள்ளிச்சந்தை கிராம நிர்வாக அதிகாரி தங்கத்துரை அந்த மூட்டையை பிரித்து பார்த்தார். அப்போது, அதில், சிமெண்டால் ஆன சுடலைமாடசாமி சிலை, அம்மன் சிலை மற்றும் பித்தளையால் ஆன சூலாயுதம், பித்தளை விளக்கு, இரும்பு வாள், வெட்டு கத்தி போன்றவை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, இதுகுறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் தங்கத்துரை.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் முத்துராமன் குளக்கரைக்குச் சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் அந்த சாமி சிலைகளை மீட்டு கல்குளம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
மேலும், இந்த சிலைகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டு, இவை எப்படி இங்கு வந்தது? பழங்காலத்தைச் சேர்ந்தவையாக இருந்தால், எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பதை ஆராய இருக்கின்றனர்.
