Asianet News TamilAsianet News Tamil

நாங்குநேரி சம்பவம்: சாதி படங்களே காரணம் - எஸ்.வி.சேகர் காட்டம்!

நாங்குநேரி சம்பவத்துக்கு சாதி படங்கள் எடுக்கும் இயக்குநர்களே காரணம் என பாஜக நிர்வாகியும், நடிகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்

S ve Shekher condemns tamil cinema directors for caste  films is the reason for nanguneri incident
Author
First Published Aug 14, 2023, 2:11 PM IST

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாணவர் சின்னதுரையும், அவரது தங்கையும் வேறு சமூகத்தை சேர்ந்த சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவர் சின்னத்துரை அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் அவரை சாதி ரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

நாங்குநேரி சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாங்குநேரி சம்பவத்துக்கு சாதி படங்கள் எடுக்கும் இயக்குநர்களே காரணம் என பாஜக நிர்வாகியும், நடிகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வல்ல: மாணவர்களுக்கு அண்ணாமலை அட்வைஸ்!

இதுகுறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில், “சாதிகள் இல்லையடி பாப்பா என சொல்கிறோம். ஆனால் நாங்குநேரியில் ஒரு பள்ளி மாணவனை அவரது வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து வெட்டியுள்ளனர். சாதியை ஒழிக்க வேண்டும் என பேசுகிறோம். ஆனால் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க போகும் போது என்ன சாதி என கேட்கிறார்கள். சின்ன வயதிலேயே அந்த குழந்தைக்கு சாதி என்றால் என்ன என தெரிய தொடங்குகிறது.” என தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தகைய சம்பவங்களுக்கு சினிமாவே முக்கிய காரணம் என தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், “ சினிமாவில் அதிகமாக சாதி படங்களை எடுத்ததால்தான் இந்த வினை. இதை முதலில் ஆரம்பித்து வைத்தது இயக்குநர் முத்தையாதான். ’கொம்பன்’ என்ற படத்தை எடுத்து இதை ஆரம்பித்து வைத்தது அவர்தான். அதன் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் என பல இயக்குநர்கள் சாதி படத்தை எடுப்பதை தொடர்கிறார்கள். தனது ஜாதியை உயர்த்துவது தவறில்லை, ஆனால் அடுத்தவரின் சாதி தாழ்த்திக் காட்டுவதுதான் தவறு. சாதி படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் அந்த வெட்டுப்பட்ட மாணவனுக்கு ரூ.10 லட்சம், 20 லட்சம் கொடுப்பார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios