ரூ.800 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை...
அரியலூர்
அத்தாச்சி சான்றிதழ் வழங்க ரூ.800 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
அரியலூர் மாவட்டம், முனியங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் (50). இவரது உறவினர்கள் நால்வரை கடந்த 2004-ஆம் ஆண்டு ஒரு குற்ற வழக்கு தொடர்பாக விக்கிரமங்கலம் காவலாளர்கள் கைது செய்தனர்.
அவர்களை ஜாமீன் எடுப்பதற்கு அத்தாட்சி சான்றிதழ் தேவைப்பட்டதால் பரமசிவம், அப்போது ரெட்டிப்பாளையம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய கீழப்பழுவூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணனை (66) சந்தித்து அத்தாச்சி சான்றிதழ் கேட்டுள்ளார்.
அதற்கு நாராயணன், சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.800 லஞ்சமாக வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத பரமசிவம், இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு காவலாளர்களிடம் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் அறிவுரையின்படி, ரசாயன பொடி தடவிய பணத்தை நாராயணனிடம், பரமசிவம் கடந்த 21.5.2004 அன்று கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவலாளர்கள், நாராயணன் பணம் வாங்கும்போது கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது குறித்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கினை நேற்று விசாரித்த நீதிபதி ரவி, லஞ்சம் வாங்கிய நாராயணனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் இரண்டு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார்.
இதனையடுத்து நாராயணனை காவலாளர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைத்து தங்கள் கடமையை செய்தனர்.