ஓடும் கன்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து...!
பூந்தமல்லி அருகே பெங்களூரில் இருந்து சென்னைக்கு செல்போன் டவர் உதிரிபாகங்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
பூந்தமல்லி அருகே பெங்களூரில் இருந்து சென்னைக்கு செல்போன் டவர் உதிரிபாகங்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் இருந்து நேற்றிரவு சென்னை நோக்கி செல்போன் டவர் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே வேலப்பன்சாவடி பகுதியில் காலை 10 மணியளவில் லாரி வந்தது. அப்போது அந்த லாரியின் முன்பக்க இன்ஜினில் திடீரென புகை எழும்பியது. இதையடுத்து அந்த லாரியை சாலையோரமாக நிறுத்தினார். இதற்குள் லாரியின் முன்பக்கத்தில் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதை பார்த்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து அவ்வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள், பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பூந்தமல்லி, மதுரவாயல் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து 2 வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் லட்சக்கணக்கான மதிப்புள்ள செல்போன் டவர் உதிரிபாகங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.