சென்னை விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் தங்களது விவரங்களை பதிவு செய்யவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் தங்களது விவரங்களை பதிவு செய்யவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சிங்கப்பூர், ஹாங்காங், பிரிட்டன், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கும் ஒமைக்ரான் விமானங்களில் செல்வோர் முலம் பரவியது. இதனால் ஒமைக்ரான் பரவல் அதிகமாக உள்ள 12 நாடுகள் ரெட் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளன. அதிக ஆபத்து நாடுகளாக வகைப்படுத்தப்பட்டு, இந்நாட்டிலிருந்து வரும் பயணிகள் மிக மிக தீவிரமாக கண்காணிப்படுகின்றனர். இருந்தபோதிலும் நேற்று முன்தினம் வரை தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 113 பேர் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். மேலும் தெலுங்கானாவில் 12 பேர், மராட்டியத்தில் 8 பேர், கர்நாடகாவில் 6 பேர், கேரளாவில் 4 பேர் என நேற்றும் 30 பேர் புதிதாக ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 143 ஆக உயர்ந்து விட்டது. கேரளாவில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் இருவர் திருவனந்தபுரத்தையும், ஒருவர் மலப்புரத்தையும், மற்றொருவர் திருச்சூரையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதற்கிடையே, நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய விமான நிலையங்களில் கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவுகள் வரும்வரை விமான நிலையத்தில் காத்திருந்து அதன் பின்னரே வீடுகளுக்கு செல்ல வேண்டும். அங்கு சென்றாலும் கட்டாயம் ஒரு வாரம் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். அடுத்த 8ஆவது நாள் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை கொரோனா தொற்று இருந்தால், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவர். மேலும் ஒமைக்ரான் பாதிப்பா என ஆய்வகம் ஆய்வு செய்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த விதிமுறைகள் அனைத்து நாட்டு பயணிகளுக்கும் விதிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தின. அதன்படி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஹை-ரிஸ்க் நாட்டு பயணிகள், இந்தியா வருவதற்கு முன்னரே Airsuvidha என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இது கட்டாயம். அதில் கடந்த 14 நாட்களில் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பதையும் குறிப்பிட வேண்டும். பயணிகள் டெஸ்ட்டிற்கான கட்டணத்தையும் இணைய தளம் மூலமாகவே கட்டிவிட வேண்டும். சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய 6 சர்வதேச விமான நிலையங்களில் இந்தக் கட்டுப்பாடு இன்று முதல் அமலாகியுள்ளது. இதன்மூலம் பயணிகள் எந்தெந்த நாடுகளுக்கு சென்றார்கள் என்ற முழு விவரங்கள், விமான நிலைய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு முன்பாகவே தெரிந்து விடும். அதனடிப்படையில் அவர்கள் டெஸ்ட் எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளுடனும் தயார் நிலையில் இருப்பார்கள்
