ரூ.300 கோடி கடன் வாங்கித் தரேன்னு ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது; சதுரங்கவேட்டை டெக்னிக்…
நாமக்கல்
குறைந்த வட்டியில் ரூ.300 கோடி கடன் வாங்கி தருகிறேன் என்று ரூ.3 கோடி மோசடி செய்தவரை காவலாளர்கள் கைது செய்தனர். “ஒருத்தரை ஏமாத்தணும்னா அவங்களுக்கு ஆசையைத் தூண்டனும்” என்ற சதுரங்கவேட்டை படத்தை போன்று ஏமாற்றியுள்ளார் இந்த பலே திருடன்.
சென்னை அருகேவுள்ள மதுரவாயல் மதுர கார்டனைச் சேர்ந்தவர் தியாகராஜன் (48). இவர் மீது திருச்செங்கோடு அருகேவுள்ள கல்வி நிறுவனம் சார்பில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், “தங்களது கல்வி நிறுவனத்தை மேம்படுத்த குறைந்த வட்டியில் ரூ.300 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி, தியாகராஜன் ரூ.3 கோடி மோசடி செய்துவிட்டார்” என்று கூறியிருந்தது.
இந்த புகார் மனுவை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு காவலாளர்களுக்கு உடனே உத்தரவிட்டார்.
அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின்போது, பெங்களூருவில் ஏஜென்சி நடத்திவந்த தியாகராஜன் அந்தக் கல்வி நிறுவனத்தினரிடம் புதுடெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து குறைந்த வட்டிக்கு ரூ.300 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடியை கமிஷனாக பெற்றது தெரியவந்தது.
இதனையடுத்து தியாகராஜனை குற்றப்பிரிவு காவலாளர்கள் கைது செய்தநர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
கைது செய்யப்பட்ட தியாகராஜன் மீது ஏற்கனவே சென்னை மற்றும் பெங்களூருவில் மோசடி வழக்குகள் போடப்பட்டு இருக்கிறதாம்.