பேருந்தில் தூங்கிய பெண் பயணிக்கு நேர்ந்த கொடுமை! ரூ.45 ஆயிரத்தை பறிகொடுத்துவிட்டு கதறல்...
தருமபுரியில் அரசுப் பேருந்தில் தூங்கி கொண்டுவந்த பெண்ணிடம் இருந்து மர்ம நபர் ரூ.45 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகள் மணிமேகலை. 18 வயதே ஆன இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
இந்த நிலையில் தனது பெற்றோருடன் சேலத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். பேருந்து தருமபுரி மாவட்டம், அரூர் அருகே வந்துக் கொண்டிருந்தது. அப்போது மணிமேகலை கையில் வைத்திருந்த பையை காணவில்லை என்று சத்தம் போட்டார்.
இதனைக் கேட்டு பதறிய நடத்துநர், மணிமேகலையிடம் வந்து என்ன என்று விசாரித்தார். அதற்கு மணிமேகலை, தான் கையில் வைத்திருந்த பையை காணவில்லை என்றும் அதில் ரூ.45 ஆயிரம் பணம் இருந்தது என்றும் தெரிவித்தார். மேலும், தான் தூங்கிக் கொண்டிருந்தபோது தான் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறி கதறினார்.
உடனே பேருந்தை அரூர் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர். அங்கு காவலாளர்களிடம் நடந்ததைக் கூற அவர்கள் பேருந்து பயணிகளிடம் சோதனை நடத்தினர். அனைத்துப் பயணிகளையும் சோதனை நடத்திய பிறகும் பணம் கிடைக்கவில்லை. தூங்கிக் கொண்டிருந்த மணிமேகலையிடம் பணத்தை திருடிவிட்டு மர்ம நபர் தப்பிச் சென்றிருப்பார் என்று காவலாளர்கள் கூறினர்.
பின்னர், இதுகுறித்து மணிமேகலை காவலாளர்களிடம் புகார் கொடுத்தார். விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவலாளர்கள் மணிமேகலைக்கு ஆறுதல் கூறினர்.