ரூ.40 இலட்சம் தங்க நகைகள் கடத்தல்... திருச்சி விமான நிலையத்தில் வசமாக சிக்கிய மலேசிய பெண்...
திருச்சி
ரூ.40 இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கடத்தி வந்த மலேசிய பெண்ணை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையத்திற்கு தனியார் விமானம் ஒன்று வந்தது. அதிலிருந்து இறங்கிவந்த பயணிகளிடம் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, மலேசியாவைச் சேர்ந்த மஜ்துனிசா பானு என்பவர் தனது உடலில் தங்க சங்கிலிகள், வளையல்கள், கை சங்கிலிகளை அதிகளவில் அணிந்து வந்தார். இது, அதிகாரிகளுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அவரிடம், அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தியபோது அந்த நகைகள் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதன்பேரில் அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த நகைகள் மொத்தம் 1299 கிராம் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.40 இலட்சம் இருக்குமாம். அந்த பெண்ணிடம் அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புகூட சிங்கப்பூரில் இருந்து வந்த தனியார் விமானத்தில் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.