அரசு மதுபானக்கடையில் ஓட்டைப்போட்டு ரூ.32 ஆயிரம் மதுபானங்கள் திருட்டு…
கோபி அருகே மதுபானக் கடையின் சுவரில் ஓட்டைப்போட்டு ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களைத் திருடிச் சென்றவர்களை காவலாளார்கள் தேடி வருகின்றனர்.
கோபி அருகே புதுக்கரைபுதூரில், அரசு மதுபானக்கடை உள்ளது. இந்தக் கடையின் மேற்பார்வையாளராக ஆறுமுகம் என்பவரும், விற்பனையாளராக மூர்த்தி, சுந்தரராஜன் ஆகியோர் உள்ளனர்.
திங்கள்கிழமை இரவு இவர்கள் கடையை வழக்கம்போல பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் மதுபானக் கடையின் வழியாகச் சென்றவர்கள், கடையின் பக்கவாட்டு சுவரில் ஓட்டைப் போடப்பட்டிருந்ததைப் பார்த்து, கடையின் மேற்பார்வையாளர் ஆறுமுகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, உடனடியாக அவர் சம்பவ இடத்துக்குச் சென்றார். தகவலறிந்து, கோபி வட்டாட்சியர் குமரேசன், காவலாளர்கள் ஆகியோரும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, கடையின் பக்கவாட்டு சுவரில் ஓட்டைப்போட்டு உள்ளே புகுந்த சிலர், அங்கிருந்து ரூ.32 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்களையும், ஆயிரம் ரூபாயையும் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, கோபி காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.