கருப்பசாமி கோவிலின் உண்டியலை உடைத்து ரூ.20 ஆயிரம் கொள்ளை; இது இரண்டாவது முறை…
விருதுநகர்
விருதுநகரில் உள்ள கருப்பசாமி கோவிலில் மர்ம நபர்களால் உண்டியல் உடைக்கப்பட்டு ரூ.20 ஆயிரம் கொள்ளைப்போனது. இந்த கோவிலில் இரண்டாவது முறையாக திருட்டு நடக்கிறது.
விருதுநகர் மாவட்டம், சூலக்கரையில் ஆட்சியர் அலுவலகம், மற்றும் காவல் நிலையம் இரண்டும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது.
இந்த வளாகத்தில் கருப்பசாமி கோவில் ஒன்று உள்ளது. இங்கு தினமும் ஏராளமான அடியார்கள் வந்து கருப்பாசாமியை வணங்கிவிட்டு செல்வர். அவர்கள் காணிக்கை செலுத்துவதற்கு என்று உண்டியல் ஒன்றும் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த உண்டியலை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மர்ம கும்பல் உடைத்து பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில், கருப்பசாமி கோவிலின் பூசாரியான மாரிக்கனி இரவில் கோவில் வளாகத்திலேயே படுத்துத் தூங்குவது வழக்கம். அதேபோல செவ்வாய்க்கிழமை அன்று வழிபாட்டை முடித்துவிட்டு கோவில் வளாகத்தில் படுத்து தூங்கியுள்ளார்.
நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு மாரிக்கனி விழித்தார். பின்னர், இரண்டு பேரையும் பிடிக்க முயற்சித்தபோது இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். உண்டியல் இருந்து ரூ.20 ஆயிரம் கொள்ளை போய் இருப்பதாக மாரிக்கனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சூலக்கரை காவலாளர்கள் இரண்டாவது முறையாக கருப்பாசாமி கோவிலில் திருட்டுப் போயிருப்பதை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையம் என இரண்டும் இருந்தும் கோவிலில் இரண்டாவது முறையாக திருட்டு போயிருப்பது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.